Search This Blog

Tuesday, June 2, 2020

பிஞ்சுகளை பாதுகாப்போம்



...பிஞ்சுகளை பாதுகாப்போம்...
அண்மையில் ஜோதிகா நடிப்பில் Amazon prime இல் வெளியிடப்பட்ட OTT படமான 'பொன் மகள் வந்தாள்'  என்ற படத்தை காண கிடைத்தது..
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், ஆண் குழந்தைகளை வளர்க்க வேண்டிய விதம்
பாலியல் தொல்லைகளுக்குப் பின்னால் எவ்வளவு துயரம் இருக்கிறது என்பதை இந்த பொன்மகள் உணர்வுபூர்வமாய் உருக்கமாய் சொல்கிறாள். தாமதமாகக் கிடைக்கும் நீதியும் அநீதிதான் என்பதைச் சொல்ல வரும் படம். கூடவே, பெண் குழந்தைகளை மட்டும் சொல்லிச் சொல்லி வளர்க்காதீர்கள், ஆண் குழந்தைகளையும் சொல்லிச் சொல்லி வளருங்கள் என்கிறார்கள். நல்ல கருத்து, நல்ல கதை.. படம் பார்த்து விட்டு என் மனத்தில் தோன்றிய வெறுமையை வரிகளில் தர எத்தனிக்கிறேன்.
சிறு மலராக மலர்ந்து எதிர்காலம் பற்றிய கனவுகளுடன் வளரும் பிஞ்சுக்குழந்தைகளை பாதுகாத்து பூங்காவாக பூத்துக்குலுங்க விடுவதை விட்டு அவர்களை நசுக்கி எதிர்காலத்தை வெறும் சருகுகளாக்குவதென்பது ஏற்றுக்கொள்ளபட முடியாத விடயமாகும்.
தாயின் கருவிலிருந்து சிதையாமல் வெளியே வரும் போதே நாம் வெற்றி பெற்று விடுகிறோம் என்று உரைத்த  பாடல்கள் எல்லாம் தற்போது கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்து நிற்குமளவிற்கு எம்மை சுற்றி ஏகப்பட்ட விடயங்கள் நடந்தேறுகின்றன. 
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்கின்றோம்....  சரி... எதிர்காலத் தலைவர்களுக்கும் தலைவிகளுக்கும் இந்த சமூகத்தில் என்ன வகையான பாதுகாப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்...???
நாளுக்கு நாள் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய செய்திகளும் விழிப்புணர்வு விளம்பரங்களும் ஊடக அறிவித்தல்களும் வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. தொழில்நுட்பரீதியாக உலகம் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கின்ற  போதிலும் எம் மத்தியில் இருந்த கடமை... கண்ணியம்...கட்டுப்பாடு... கருணை... காருண்யம்... போன்ற விடயங்களை இழந்து வருகிறோமோ என நினைக்கத் தோன்றுகிறது. இத்தவறை நாம் தெரிந்து செய்கிறோமா - தெரியாமல் செய்கிறோமா என்று இன்னமும் புரியவில்லை.எமது முந்தைய தலைமுறை பேணி வந்த ஒழுக்க விழுமியங்கள் தற்போது எட்டாக்கனியாகி கொண்டிருக்கிறது என்பதென்னவோ கசப்பான உண்மைதான்.
சிறுவர் துஷ்பிரயோகம் என்பது, சிறுவர்களைத் தவறாக வழிநடத்தும் அனைத்து வித தவறுகளையும் குறிக்கும். என்றாலும், விபரமறியா சிறுவர்-சிறுமியரை வயதில் மூத்தவர்கள், தமது பாலியல் வக்கிரங்களுக்கு இரையாக்கும் இழி செயலையே சிறுவர் துஷ்பிரயோகம் என்ற பதத்தினூடாக இங்கு குறிப்பிடப்படுகின்றது. வயதில் முதிர்ந்த ஒருவர், சிறுவர்-சிறுமியரிடம் ஆபாசமாகப் பேசுவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது, அந்தரங்க உறுப்புக்களைத் தொடுவது அல்லது அன்போடு அரவணைப்பது போல் தொட்டுத் தழுவித் தனது ஆசையைத் தீர்த்துக்கொள்வது போன்ற இழி செயல்கள் பல மட்டத்திலும் நடந்தேறி வருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளுக்குள்ளாகும் சிறுவர்-சிறுமியர் உளவியல் ரீதியில் பாரிய பிரச்சினைக்குள்ளாகின்றனர். இது சட்ட ரீதியில் பாரிய குற்றமாக இருப்பினும், இவ்விதம் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்காமல் குடும்ப கௌரவத்திற்காக மூடி மறைக்க முற்படுவதனால், இந்தக் குற்றம் காட்டுத் தீ போல் பரவி வருகின்றது.
குழந்தை பிறந்ததும் இப்போதைய தாய்மாரின் கவலை எவ்வாறு பாதுகாப்பது -  இந்த நரக உலகத்தில் சிறந்த எதிர்காலத்தை எப்படி காண்பிப்பது என்பதுதான்.   தாய், தந்தை, சகோதரன், சகோதரி சித்தப்பா, சித்தி பெரியப்பா பெரியம்மா தாத்தா பாட்டி ஏன் ஆசிரியர் என அனைத்து உறவுகளையும் சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டியுள்ளது. 
இன்றைய நாளேடுகளிலும் சமூகவலைதளங்களிலும்  அண்ணன் தங்கையை துஷ்பிரயோகம், அப்பா மகளை துஷ்பிரயோகம், ஆசிரியர் மாணவனை துஷ்பிரயோகம் என செய்திகள் வருவதை நாம் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 
முதலில் இத்தகைய கொடுமை உலகில் அன்றாடம் நடந்து வருகின்றது என்ற அறிவு குறிப்பாக பெற்றோருக்கு இருப்பது அவசியமாகும். அறிவு இருந்தால் தான் அவதானமாக இருக்கலாம். பாலியல் விடயத்தில் யாரையும் எடுத்த எடுப்பில் நம்பிவிட முடியாது. பகிரங்கக் குற்றவாளிகளை விட நல்லவர்களாக நடப்பவர்கள் தான் குடும்பத்துக்குள்ளும், தம்மை அண்டி வாழ்பவர்களிடமும் இந்தக் குற்றத்தைப் புரியும் அபாயம் இருக்கின்றது. எனவே, அனைவர் விடயத்திலும் பெற்றோர் விழிப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியமாகும்.
வீட்டில் தனியாக ஓர் ஆண் இருக்கும் போது பொருட்கள் வாங்கவோ அல்லது ஏதேனும் உதவிகள் செய்யவோ பெண் பிள்ளைகளை அனுப்பக் கூடாது!
– ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அடுத்தவர் வீட்டில் சிறுவர்-சிறுமியரை உறங்க அனுப்பக் கூடாது!
– அவரவர் வயதுக்கு மூத்தவர்களுடன் நேசத்துடனும், நெருக்கமாகவும் பழக விடக்கூடாது! சம வயதுடையவர்களுடன் நட்பாக இருக்கலாம்!
– தனிமைப்படும் சந்தர்ப்பத்தைக் குறைக்க வேண்டும். சிறுவர்-சிறுமியர் தனிமையில் இருக்கும் போதே துஷ்பிரயோகத்திற் குள்ளாகின்றனர்.
– உறவுக்காரர்கள், அந்நியர்கள், நண்பர்கள், வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் போன்றவர்களுடன் ஒரே கட்டிலில் ஒன்றாக சிறுவர்-சிறுமியரை உறங்க விடலாகாது.
– வீட்டில் நடைபெறும் விஷேடங்களின் போது, பிள்ளைகளின் உறக்கம் குறித்து பெற்றோர் கவனம் செலுத்துவதில்லை. கண்டபடி அவர்கள் உறங்கிவிடுவர். அத்தகைய கலப்பு உறக்க சந்தர்ப்பங்களைக் காமுகர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே, இதில் விழிப்பு அவசியம்!
– சிறுவர்-சிறுமியர் அன்பளிப்புக்களுக்கு ஏமாறாதவர்களாக பழக்குதல் பெற்றோரின் கடமையாகும். சிறுவர்களை பலி கொள்ளும் பாதகர்கள் ‘டொஃபி (மிட்டாய்) தருகிறேன்; சொக்கலேட் தருகிறேன்; பலூன் தருகிறேன். வா!’ என அவர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றுகின்றனர். எனவே, யார் எதைத் தந்தாலும் எடுக்கக் கூடாது; ஏமாறக் கூடாது என்ற கட்டுப்பாடு அவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும்.
– எமது பிள்ளைகள் அடுத்தவர்களிடத்தில் தேவையுடையோராக இருக்கக் கூடாது! தம்மை நாடி தேவையுடன் வருபவர்களிடம் காமுகர்கள் துணிச்சலுடன் கை நீட்டலாம். சிறுவர்களும் தமது தேவை நிறைவேற வேண்டும் என்ற ஏக்கத்தில் அதற்கு இசைந்து செல்லலாம்.
– ஏற்கனவே நன்றாகப் பழகிய ஒருவர் வீட்டிற்கு வந்ததும் நமது சிறுவர்கள் அவர்களைக் காணப் பிடிக்காது ஒளிந்து கொண்டால் அல்லது அவர்களை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்க்க முனைந்தால், அல்லது அவர்களது சிறு விளையாட்டுக்குக் கூட அதிகம் ஆத்திரம் கொண்டால், அவர்கள் மூலம் இவர்கள் விரும்பத்தகாத ஏதோ ஒன்றைச் சந்தித்துள்ளனர் என்பது அர்த்தமாகும். எனவே, சிறுவர்களின் நடத்தைகளில் ஏற்படும் மாறுதல்களை அவதானித்துப் பெற்றோர்கள் அவர்களை வழிநடத்த வேண்டும்.
யாரென்று தெரியாதவர்கள் எந்த பொருட்களை தந்தாலும் அவற்றை வாங்கக்கூடாது,  தனிமையில் வீட்டில் இருப்பதனை விடுத்து ஏனைய சிறுவர்களுடன் விளையாடுதல் மற்றும் பெரியோர்களின் அரவணைப்பு அவர்களின் சொல் பேச்சு கேட்டல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தால் துஸ்பிரயோகத்தில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என எடுத்து கூறப்பட்டது.
வித்தியசமான முறையில் தொடுதல், உரசுதல் போன்றவற்றில் யாராவது செயற்பட்டால் முதலில் பெற்றோருக்கு தெரியப்படுத்துமாறு இதன்போது சிறுவர்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட வேண்டும்.
– அத்துடன் பெற்றோர் பிள்ளைகளை சதாவும் தமது கண்காணிப்பில் வைத்திருப்பதன் மூலமும், அவர்களுடன் அன்புடனும் நெருக்கத்துடனும் பழகுவதன் மூலமும் பிள்ளைகள் துஷ்பிரயோகத் திற்குள்ளாகுவதைப் பெரும் அளவில தவிர்க்க முடியும்.
– அத்துடன் பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்தும், சிறுவர்-சிறுமியர் சந்திக்கும் ஆபத்துக்கள் குறித்தும் சிக்கலான சந்தர்ப்பங்களில் தம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
– குழந்தைகள் தமது பிரச்சினைகளைப் பெற்றோர்களிடம் கூறக் கூடிய அவகாசத்தையும், நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வதுடன் அதற்கான துணிவையும் அவர்களுக்கு அளிக்கவேண்டும்.
– அடுத்தவர்கள் நட்புக்காகவும், அன்புக்காகவும் தீண்டத்தக்க உறுப்புக்கள் எவை? தீண்டக் கூடாத உறுப்புக்கள் எவை என்ற தெளிவு அவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.
– தவறைத் துணிவுடனும், உரத்த தொனியிலும், உறுதியுடனும் மறுக்கும் துணிவு அவர்களுக்கு ஊட்டப்படுவதுடன், தேவைப்பட்டால் ஆபத்தின் போது எப்படித் தப்ப முடியும்? என்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டவேண்டும்.
இவ்வாறு, பெற்றோர்கள் தமது குழந்தைகள் விடயத்தில் விழிப்புடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் நடந்துகொண்டால் எமது சிறுவர்களின் எதிர்கால வாழ்வை நாசப்படுத்தும் துஷ்பிரயோக நடவடிக்கைகளிலிருந்து அவர்களைக் காக்க முடியும். இது விடயத்தில் ஒவ்வொரு பெற்றோரும் கூடிய கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
காலமெல்லாம் பெண் பிள்ளைகள் நாங்களே கருகுவதேன்...
கள்ளிப்பால் ஊத்தி கொண்ட காலமும்...
காமப்பால் தீத்துக் கொல்லும் கலியுக காலமும்... பெண்களுக்குதானா....
வீட்டில் பெண் பிள்ளைகளுக்கு எப்படி சொல்லி கொடுத்து வளர்கிறோமோ அதே போல் ஆண் பிள்ளைகள் இருப்பின் அவர்களுக்கும் பெண்களை எவ்வாறு பார்க்க வேண்டும், பழக வேண்டும், அணுக வேண்டும், என்றும் சொல்லி கொடுத்து வளர்ப்போமாக...
Fazeen Rifaya Sameem

Dark Side of Trending Penguin 🐧

 Dark Side of Trending Penguin 🐧  இன்றைக்கு சமூக வலைத்தளம் முழுவதும் பேச்சு பொருளாய் மாறி இருக்கு ஒரு பென்குயின்…70km தூரம் எதையும் யோசிக்க...